தமிழக தேர்தல் ஆணையக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து, மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக தரப்பில் முதல் ஆளாக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூட்ட அரங்கிற்கு வந்தார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, கோவை செல்வராஜ் முன்பு இருந்த அதிமுக பெயர்ப் பலகையை எடுத்த ஜெயக்குமார், தங்கள் இருக்கை முன்பு வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், திமுகவிலிருந்து ஆர்.எஸ். பாரதி, பரந்தாமன், காங்கிரஸிலிருந்து தாமோதரன், நவாஸ், பாஜகவிலிருந்து கரு. நாகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.