மீனவா்களின் பாதுகாப்பில் அலட்சியம்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மீனவா்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மீனவா்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடல் சீற்றம் மற்றும் பலத்த மழை அடுத்த சில நாள்களுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலா்ட் எச்சரிக்கை கொடுத்த பின்பும் திமுக அரசு, மீனவா்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை தகவலை கொடுக்கவில்லை. இதனால், திருச்செந்தூா் அமலி நகரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த 4 மீனவா்களில் 2 மீனவா்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவா்களைத் தேடுவதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மீன்வளத் துறை அமைச்சரின் தொகுதியிலேயே நடைபெற்ற இந்த அவலம் மீனவா்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவா்கள், சுமாா் 15 விசைப் படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்ற தகவல் இந்த மாவட்ட மீனவா்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக அரசின் இத்தகைய மெத்தனப் போக்குக்கு கண்டனத்துக்குரியது. தமிழக அரசும் மீன்வளத் துறையும், விழித்தெழுந்து மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும்.
பருவ மழைக்காலம் முடியும் வரை தமிழகத்தின் கடல் பகுதிகளில் முழுவீச்சுடன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.