'நான் முதல்வன் திட்டம் உதவியது' - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற காஞ்சிபுரம் கிருபாகரன்!
குடிமைப் பணிக்குத் தேர்வான காஞ்சிபுரம் நெசவாளர் மகன் கிருபாகரன் பேட்டி...
நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும் மாவட்டந்தோறும் அமைத்தால் அதிக அளவில் மாணவர்கள் குடிமைப் பணிக்கு தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருபாகரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட நாராயணபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், நெசவுத் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் கிருபாகரன் உதவி கணக்கு அலுவலராக தமிழ்நாடு மின்சார வாரிய காஞ்சிபுரம் கோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆரம்பக் கல்வியை அரசு தொடக்கப் பள்ளியில் பயின்று அதன் பிறகு தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியைத் தொடர்ந்து பட்டயக் கணக்காளராக பணி நிறைவு செய்து, பின் மின்சார வாரிய தேர்வில் தேர்வாகி பணி தற்போது பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது கல்வி தாகம் தணியாமல் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக ஐஏஎஸ் தேர்வில் தொடர்ச்சியாக பயின்று வந்த நிலையில் கடந்த 2024-ல் நான் முதல்வன் தொடங்கப்பட்டதால் அதில் இணைந்து தொடர்ந்து பல்வேறு கட்ட பயிற்சிகளை நிறைவு செய்து ஒவ்வொரு தேர்விலும் தேர்வாகி தற்போது வெளியான குடிமைத் தேர்வு பணி பட்டியலில் 439-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து கிருபாகரன் கூறுகையில்,
"கடந்த காலங்களில் கிடைக்காத வசதிகள் தற்போது வீட்டிலேயே இணையதளத்தின் மூலம் கிடைத்து வருகிறது. அதனை சரியாக பயன்படுத்தி நமது இலக்கை அடைய வேண்டும். அது மட்டுமல்லாது தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் உரிய ஊக்கத்தொகை மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், பயிற்சித் தேர்வுகள் என அனைத்தையும் திறன்மிக்க பேராசிரியர்கள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என பலரின் அனுபவங்களை அளித்து நேர்முகத் தேர்வில் செயல்படுவது குறித்தும் பயிற்சி அளித்து உருவாக்கி வருகின்றனர். இது எனக்கு பெரிதும் உதவி ஐந்தாண்டு கனவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அதிகாரியைக் கண்டு பயப்படாத வகையில் செயல்படுவேன்" என நெகழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், "நான் முதல்வன் திட்டத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுவது மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் மாவட்டந்தோறும் இதனை உருவாக்கி பல நூறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அரசு உருவாக்க வேண்டும். இத்திட்டம் பெரிதும் வரவேற்கத்திட்டம்" எனத் தெரிவித்தார்.