முகப்பு
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை முடிவு: சிக்கியது என்ன?

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கரருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ. 26 லட்சம் பணம், 4 சொகுசு கார்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கரருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ. 26 லட்சம் பணம், 4 சொகுசு கார்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கர் 2011 முதல் 2021 வரை இரு முறை பேரவை உறுப்பினராகவும், நாமக்கல் நகரமன்றத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுக நகர செயலாளராகவும் உள்ளார். இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.72 கோடி சொத்து சேர்த்ததாக (315 சதவீதம் அதிகமாக) புகார் எழுந்தது. 

மேலும், இவரது மனைவி உமா மற்றும் நண்பர்கள் மூலம் பல்வேறு இடங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமச்சந்திரன், ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் தலைமையில் நாமக்கல் சந்தைப்பேட்டை, புதூர் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல், மதுரை, திருப்பூர் என சுமார் 30 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரூ.26.52 லட்சம் பணம், 4 சொகுசு கார்கள், 1.68 கிலோ தங்கம், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், 20 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.