மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அணைகள் நிரம்பிய நிலையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் உபரி நீர் மற்றும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்து உள்ளது.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணைக்கு வரும் வெள்ளநீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ள நீர் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.