செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தையொட்டி திங்கள் கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீர்த்தம், சங்க தீர்த்தம், வேதமலை உள்ளிட்ட பல்வேறு பெயர்களை கொண்டு வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக திரிபுரசுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோயில் நான்கு வேதங்களைக் கொண்ட மலை மீது உள்ளது.
இக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோம வாரத்தில்1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை கடைசி சோமவாரமான திங்கள்கிழமை பிற்பகல் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியையொட்டி சங்க தீர்த்த குளத்தில் பிறந்த சங்குகளுடன் 1008 சங்குகளுக்கு அலங்காரம், யாக பூஜை, சங்கு பூஜைகள், நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் மூலவர் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்குகளில் உள்ள புனித நீரால் சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ ரயிலில் ‘வாரிசு’ போஸ்டர்கள்!
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர். சிவ பக்தர்கள் குழுவினர் சிவ பாடல்கள், சிவபுராணம், திருவாசகம் பாடினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் விஜி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார், பக்தர்கள் செய்திருந்தனர்.