எல்லா வழிகளிலும் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், இதை நூல் என்று கூறுவதை விட வரலாற்றின் கருவூலம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இந்நூல் நேருவின் வரலாறு மட்டுமல்ல, இந்தியாவின் வரலாறாகவும் இருக்கிறது. கடந்த கால வரலாறு மட்டுமல்ல, எதிர்கால இந்தியா எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான கையேடாகவும் உள்ளது. காலத்துக்கு தேவையான கருவூலத்தை உருவாக்கி தந்துள்ள கோபண்ணாவை பாராட்டுகிறேன். கொள்கையை கடந்த நட்புக்கு கோபண்ணா இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிக்க- 'தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன'
திராவிட இயக்கத்தின் சமூக நீதி கொள்கையின் மீது மாறாத பற்று கொண்டவர் கோபண்ணா. எந்த சூழ்நிலையிலும் தேசிய கொள்கையையும் திராவிட கொள்கையையும் இணைத்து செயல்படக் கூடியவர் கோபண்ணா. தேர்தல் நேரத்தில் கூட்டணி உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர் கோபண்ணா. அனைவரது இல்லங்களிலும் மாமனிதர் நேரு புத்தகம் இருக்க வேண்டும். ஏற்கெனவே கோபண்ணா எழுதிய காமராஜர் வரலாற்று நூலை கருணாநிதி வெளியிட்டு சிறப்பித்தார். மாமனிதர் நேரு நூலில் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது புத்தகத்தின் சிறப்பாக உள்ளது.
எல்லா வழிகளிலும் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்தி பேசாத மக்களிடம் இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்தார் நேரு. தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மதச்சார்பற்ற சக்திகளால் நேரு போற்றப்படுகிறார். கூட்டாட்சி, மாநில சுயாட்சி, சமூக நீதியை நிலை நாட்ட நேரு தேவைப்படுகிறார் என்றார்.