முகப்பு
தமிழ்நாடு

பணத்துக்காக முதலாளிகளை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்கள்; ஒருவர் பலி

சம்பாதித்த பணத்தை எடுத்துச் சென்ற முதலாளிகளை 2 வெளி மாநில இளைஞர்கள் கொடூரமாக கத்தியால் குத்தியதில் ஒரு முதலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
வடமாநில இளைஞர்கள் தாக்கியதில் பலியான சந்தோஷ்.
பகிர்:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே வியாபாரம் செய்து சம்பாதித்த பணத்தை எடுத்துச் சென்ற முதலாளிகளை 2 வெளி மாநில இளைஞர்கள் கொடூரமாக கத்தியால் குத்தியதில் ஒரு முதலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர கொலை சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குமரன் டிரேடர்ஸ் என்ற இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் பொம்மிடி அருகே உள்ள குறிஞ்சிப்பட்டி நடூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரேம்குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து கடையை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடையில் வேலை செய்வதற்காக பிகார் மாநிலம் பேகுசிரா மாவட்டத்தைச் சேர்ந்த சீப் சந்திர யாதவ் மகன் சோபித்(18) மற்றும் குல்சந்த்ஷாத் மகன் பெர்ஜி(15) என்ற இரண்டு இளைஞர்களை கடையில் வேலைக்கு அமர்த்தி கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் பணிபுரிந்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வியாபாரத்தில் வந்த மொத்த பணம் சுமார் 4லட்சத்தை வீட்டுக்கு எடுத்து செல்வதற்காக இரண்டு உரிமையாளர்களும் புறப்பட்டுச் சென்றனர். இதனிடையே இந்த பணம் வசூல் ஆவதை கண்ட வடமாநில இளைஞர்கள் இரண்டு பேரும் உரிமையாளர்களை ஒரே நேரத்தில் கொலை செய்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் இரண்டு உரிமையாளர்களும் வசூலான பணத்தை எடுத்துக் கொண்டுச்செல்ல முற்பட்டனர். இதையறிந்த இரண்டு இளைஞர்கள் திட்டம் தீட்டியபடி உரிமையாளர்களை தனித்தனியாக நிறுத்தி வைத்து அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர். 

பின்னர் இரண்டு இளைஞர்களில் ஒரு இளைஞர் சந்தோஷ் குமாரை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதைக் கண்ட பிரேம்குமார் உடனே சந்தோஷைக் காப்பாற்றச் சென்ற பொழுது அவரை கொலை செய்ய அவர் அருகில் இருந்த மற்றொரு இளைஞனும் பிரேம்குமாரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். 

பின்பு பிரேம்குமார் கல்லால் இளைஞரை தாக்க முயற்சித்துள்ளார். அப்பொழுது அவரை தாக்காமல் அந்த இளைஞர் விட்டு விட்டார். ஆனால் சந்தோஷ் உடலில் கத்தி குத்து அதிகமாக இருந்தால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் சத்தம் போடுவதை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக சந்தோஷை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சந்தோஷ் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

பின்பு பொதுமக்கள் பிடித்து கொடுத்த வடமாநில இளைஞர்கள் இருவரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் வடமாநில இளைஞர்களுக்கு உரிமையாளர்கள் சம்பளம் வழங்காமல் இருந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் உரிமையாளர்கள் தரப்பில் வடமாநில இளைஞர்களுக்கு முறையாக சம்பளம் கொடுத்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்தனர். 

பின்னர் சந்தேகமடைந்த போலீசார் வட மாநில இளைஞர்கள் கடந்த ஒருவாரமாக வசூலான பணத்திற்காக கொள்ளை அடிப்பதற்காக கொலை செய்து இருக்கலாம் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். காடையாம்பட்டி அருகே பணத்திற்காக வேலைக்கு அமர்த்திய உரிமையாளரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தால் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்திய முதலாளிகள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உரிமையாளரை வடமாநில இளைஞர் கொலை செய்யும் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →