நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா
நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் தை கடைசி வெள்ளி திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாப் சிம்மரின் மனைவி யமுனாம்பாள். இவர் நீடாமங்கலம் அரண்மனையில் தங்கி வசித்து வந்தார். இப்பகுதி மக்களை தெய்வம் போல் காத்துவந்தார். இதனாலேயே அவர் நிறைமாத கர்ப்பிணியாக ஐக்கியமான யமுனாம்பாள் தோட்டத்தில் அவருக்கு கோவில் எழுப்பி நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் மற்றும் பௌர்ணமி நாட்களிலும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
வருடம்தோறும் தை கடைசி வெள்ளிக்கிழமையன்று யமுனாம்பாள் கோவில் திருவிழாவும் அதிவிமரிசையாக நடத்தப்படுகிறது. இத்திருநாளில் சாதி, மதங்களைக் கடந்து வேறுபாடின்றி அனைவரும் யமுனாம்பாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிறப்பு வாய்ந்த இக்கோவில் தை கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் ராஜகணபதி சன்னதியிலிருந்து பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ராஜகணபதிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மாலை தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யமுனாம்பாள். பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். திருமணமாகாத பெண்கள் திருமணமாக வேண்டியும், கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைய வேண்டுதல் செய்தனர். விழாவில் திரளான பக்தர்கள் மழையைப் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர். சந்தானராமசாமி கைங்கர்ய சபாவினர் அன்னதானம் வழங்கினார். கோவில் விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீசார் செய்திருந்தனர்.
தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த யமுனாம்பாள்.
பெண் போலீசார் உள்பட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவணிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நீடாமங்கலமே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.