முகப்பு
தமிழ்நாடு

முடிந்தால் பேரவையை முடக்கிப் பாருங்கள்: உதயநிதி 

முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கிப் பாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமிக்கு திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

மதுரை: முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கிப் பாருங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமிக்கு திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை ஓபுளா படித்துறை சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை பிரசாரத்தின் போது அவர் பேசியது, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது தமிழகம் கரோனா தொற்று பாதிப்பில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என  அடுத்தடுத்து கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் சரியான திட்டமிடலோடு அணுகி முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

அதன் பிறகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி பெரும் இயக்கமாக நடத்தப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியின்போது ஒருகோடி டோஸ் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒன்பது மாதங்களில் 10 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல பல்வேறு சிறப்பான திட்டங்கள், நடவடிக்கைகளின் காரணமாக சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் விளங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படுவது உறுதி.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்களுக்கான தள்ளுபடி சிலருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அவர்களது நகைக்கடன்களும் படிப்படியாக ரத்து செய்யப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை போன்ற திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். சட்டப் பேரவையை முடக்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கூறியிருக்கிறார். அவரைவிட நான் வயதில் சிறியவனாக இருந்தாலும் சவாலாகவே கூறுகிறேன் முடிந்தால் முடக்கிப் பாருங்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தலைமையிலான அரசு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அவரைப்போல ஆட்சிப் பொறுப்புக்கு நாங்கள் வரவில்லை. இப்போது தேர்தல் வைத்தாலும் 200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும். தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திமுகவின் பக்கம்தான் மக்கள் இருக்கின்றனர். அதிமுக பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் ஸ்டாலின் இருந்து வருகிறார் என்றார்.

 அதைத்தொடர்ந்து மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வார்டுகள் சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆனையூரில் பிரசாரம் செய்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →