உக்ரைன்: தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உக்ரைனில் நிலவி வரும் போர்ச் சூழலில் 5000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வரக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஏற்கனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து, அக்கடிதத்தினை மேற்கோள் காட்டி, மத்திய அரசு விரைவாக உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு உக்ரைனிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க- உக்ரைனிலுள்ள தமிழக மாணவர்களுடன் முதல்வர் உரையாடல்
மேலும் அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வருவதற்கு ஆகும் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கத் தயார் என முதலமைச்சர் கூறியுள்ளதையும் ஒன்றிய அரசுக்கு அவர் நினைவூட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக எழுதியுள்ள இக்கடிதத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பு பற்றி முதலமைச்சர் மிகுந்த கவலை அடைந்திருப்பதையும்; மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இச்சூழலில், உக்ரைனில் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மாணவர்களை விரைவாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசுக்கு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.