சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! இந்தியா?
சர்வதேச பயங்கரவாதக் குறியீடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதல்முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறித்து...
சர்வதேச பயங்கரவாதக் குறியீடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதல்முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் பயங்கரவாதம் தொடர்பான உயிரிழப்புகள் 6 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் செயல்பட்டுவரும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 'உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள 263 நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் மட்டும் பயங்கரவாத நடவடிக்கைகளால் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அண்டை நாடான ஆப்கானிஸ்தானிடமே பயங்கரவாத மோதல்களில் பாகிஸ்தான் அதிகம் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் மற்றும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் மூலம் அந்நாட்டில் பதற்றமான மற்றும் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படுகின்றன.
இதன் விளைவாக பயங்கரவாத நடவடிக்கைகளால் நேரிடும் உயிரிழப்புகள் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து, தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர். இதே ஆண்டில் மட்டும் 1,045 முறை பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
மிகவும் அபாயகரமான அமைப்பு என்ற பட்டியலில் உள்நாட்டில் முதலிடத்திலும் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்திலும் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து நேர்ந்த தாக்குதல் சம்பவங்களில் 67% தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பால் நடந்தவை.
உலகின் மிகவும் கொடிய நான்கு குழுக்களில், கடந்த ஆண்டில் தனது செயல்பாடுகளில் அதிகரிப்பைக் கண்ட ஒரே அமைப்பு தெஹ்ரீக்-இ-தலிபான் மட்டுமே. 2025 ஆம் ஆண்டில் இந்த இயக்கத்தின் பயங்கரவாதத்தன்மை 24% அதிகரித்து 595 தாக்குதல்கள் கூடுதலாக இருந்தன.
மேலும், நாட்டில் பிணைக் கைதிகள் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. பிணைக் கைதிகளாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2024-ல் 101-லிருந்து 2025-ல் 655-ஆக அதிகரித்துள்ளது.
2025 மார்ச் மாதம் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். இந்தத் தாக்குதலின்போது 442 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
சர்வதேச பயங்கரவாதக் குறியீடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக புர்கினா ஃபாசோ, நைஜர், நைஜீரியா, மாலி, சிரியா, சோமாலியா, காங்கோ, கொலம்பியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் 13 வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.