தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: பொதுப் போக்குவரத்து இயங்காது
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே தேவையின்றி வருபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே தேவையின்றி வருபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
முழு ஊரடங்கின்போது பெட்ரோல், டீசல் நிரப்பும் நிலையங்கள், மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், நாளிதழ் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பாா்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது.
1.20 லட்சம் போலீஸாா்: தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தலைமையில் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
குடியிருப்புப் பகுதிகளில் ஆளில்லாத கண்காணிப்பு விமானம் மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை போலீஸாா் கண்காணிக்கின்றனா். சாலைகளில் மருத்துவத் துறை, சுகாதாரத் துறை, பத்திரிகை துறை, பால் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற வாகனங்கள் சாலைகளில் சென்றால் அவற்றைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதியும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சுமாா் 13,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகா் முழுவதும் 312 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. வாகன போக்குவரத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஊரடங்கை மீறுபவா்கள் மீது எவ்வித சமரசமின்றி வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.