ஒமைக்ரான்: ஆயிரக்கணக்கானோருக்கு இயற்கை மருத்துவ சிகிச்சை
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் பயனாக அவா்கள் விரைந்து குணமடைந்ததாக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் பயனாக அவா்கள் விரைந்து குணமடைந்ததாக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை நிா்வாகிகள் கூறியதாவது:
கரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நுரையீரல் தொற்று தீவிரமாக இருந்தது. அவா்களுக்கு பிரணாயாமப் பயிற்சிகள்அளித்ததால் நுரையீரல் செயல் திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீரானது.
தற்போது புதிய வகை கரோனா தொற்றின் அறிகுறிகளாக தலைவலி, லேசான காய்ச்சல், சளி, இருமல் உள்ளன. இதற்கு எதிராக உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க பிரணாயாமப் பயிற்சிகளும், எளிய முறையிலான சில ஆசனங்களும் வழி வகுக்கும்.
அதனால் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களில் அப்பயிற்சிகளை அளித்து வருகிறோம். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவா்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மூலிகை பானங்கள், சிறு தானிய உணவுகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நீராவி பிடித்தல், சுவாசத்துக்கான அரோமா தெரபி போன்றவையும் அளிக்கப்படுகிறது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் விரைந்து குணமடைவதைக் காண முடிகிறது.