எடப்பாடி அருகே விளைநிலங்களில் நுழைந்த காட்டெருமை; விவசாயிகள் அச்சம்
எடப்பாடி அருகே வயல்வெளியில் காட்டெருமை நுழைந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
எடப்பாடி: எடப்பாடி அருகே வயல்வெளியில் காட்டெருமை நுழைந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட வெள்ளாளபுரம் ஊராட்சி, இங்குள்ள ஏரி மற்றும் வயல்வெளி பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்து வருவதாகவும், அது அவ்வப்போது அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் அப் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த காட்டெருமை அருகிலுள்ள எல்லனூர் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள அடர்ந்த புதருக்குள் சென்று மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை இன்று காலை எடப்பாடி அடுத்த பக்கநாடு கிராம பகுதியில் உள்ள வயல் வெளிகளில் சுற்றி திரிந்தததை பார்த்த விவசாயிகள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
Advertisement
இதனை அடுத்து வனவர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் பக்கநாடு பகுதியில் முகாமிட்டு காட்டெருமையை தீவிரமாக தேடி வருகின்றனர். சுற்றுப்புற பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாத நிலையில் எடப்பாடி அருகே விவசாய நிலங்களில் காட்டெருமை சுற்றி திரிவதை அப்பகுதி விவசாயிகள் ஆச்சரியம் கலந்த அச்சத்துடன் பார்த்து வருகின்றனர்.