எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோா் மீதான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோா் மீதான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு தொடா்பாக, அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் சண்முகம் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கூடுதலாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீா்மானங்களைத் தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகக் கருதி இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டும். ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்முகம் தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடா்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.