கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் நவமலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானை கூட்டம் அரசு பேருந்தை வழிமறிக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிக்கு உள்பட்ட நவமலைக்கு அரசு பேருந்து நாள்தோறும் ஐந்து முறை இயக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், மின்சார ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை பொள்ளாச்சியில் இருந்து நவமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வனப்பகுதியை விட்டு வெளியே சாலையின் குறுக்கே வந்த யானை கூட்டம் வழிமறித்தது.
இதையும் படிக்க | பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகளை கலப்பதாக புகார்
இதுதொடர்பாக பயணிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.