பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே புகுந்த மீன்பாடி வண்டி: காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை
சென்னை பல்லவன் சாலையில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே புகுந்த மீன்பாடி வண்டி குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை பல்லவன் சாலையில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே புகுந்த மீன்பாடி வண்டி குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விழாவில் பங்கேற்பதற்காக ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து காரில் பிரதமா் நரேந்திர மோடி வந்தாா். அவரது காருக்கு முன்னும்,பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.
பாதுகாப்பு கருதி பிரதமா் மோடி காா் சென்ற சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் பிரதமா் மோடியின் காா் பல்லவன் சாலையில் செல்லும்போது அவரது காருக்கு முன்பு சென்றுக் கொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே திடீரென ஒரு மீன்பாடி வண்டி புகுந்தது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அந்த மீன்பாடி வண்டிய சத்தமிட்டு, எச்சரித்து சாலையின் ஓரம் கொண்டு வந்தனா். பின்னா், அந்த வண்டியை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தனா்.
நாட்டில் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் பிரதமா் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் மீன்பாடி வண்டி புகுந்தது குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸாா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.