தூத்துக்குடியில் போதையில் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய 2 இளைஞர்கள் ரயிலில் அடிப்பட்டு பலியாகினர்.
தூத்துக்குடி 3ஆவது மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20), திரு.வி.க நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் மகன் சு.மாரிமுத்து (23), நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்தவர் குழந்தைதுரை மகன் ஜெபசிங் (23) நண்பர்களான இவர்கள் 3 பேரும் டிஎம்பி காலனியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பின்னர், தூத்துக்குடி 3 ஆவது மைல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை அதிகமானதால் மூவரும் ரயில்வே தண்டவாளத்திலேயே படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரம் நோக்கிச் சென்ற ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாரிமுத்து மற்றும் மற்றொரு மாரிமுத்து மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தண்டவாளத்தின் அருகில் தூங்கிய ஜெபசிங் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் மற்றும் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இரண்டு மாரிமுத்து மீதும் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையும் படிக்க | தமிழகத்தில் இரண்டாவது ஆண்டாக அதிகரித்த மகப்பேறு உயிரிழப்புகள்