சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து: அலுவலக உதவியாளர் கைது
சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சேலம்: சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி பொன்பாண்டி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் அவரது அறைக்கு வந்து அமர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அலுவலக உதவியாளர் பிரகாஷ்(37) என்பவர் நீதிபதி அறைக்கு வந்து, இட மாறுதல் தொடர்பாக பேசியுள்ளார். இதற்கு மாஜிஸ்ட்ரேட் பொன்பாண்டி, இதுகுறித்து மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலக உதவியாளர் பிரகாஷ் தான் சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதியை கத்தியால் குத்தினார். இதில் அவரது வலது மார்பில் காயம் ஏற்ப்பட்டது.
நீதிமன்ற ஊழியர்கள் உடனே நீதிபதியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். நீதிபதியைக் கத்தியால் குத்திய அலுவலக ஊழியர் பிரகாஷை மற்ற ஊழியர்கள் பிடித்து அஸ்தம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, நீதிபதி பொன்பாண்டி அலுவலகம் வந்து விசாரணை செய்தார். பின்னர் அவர் காயமடைந்த பொன்பாண்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கைதான பிரகாஷ் சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆவார். பணி மாறுதல் கேட்டு வழங்காததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியுள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.