ஐடிஐ, பாலிடெக்னிக் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000 ஊக்கத் தொகை
ஐடிஐ, பாலிடெக்னிக் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டது.
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வியில் சேர்ந்தால், அவர்களுக்கும் மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022 - 23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவிகள் +2 முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றால் ரூ.1,000 மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. ஆதார் அட்டையில் செல்லிடப்பேசி எண் சரியாக உள்ளதா? அறிய எளிய வழி
Advertisement
அதாவது 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது அவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அரசுப் பள்ளி மாணவிகள் 10ஆம் வகுப்பு படித்துவிட்டு ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வியில் சேரும் போது அவர்களுக்கும் மாத உதவித் தொகை வழங்கப்படும் என்று இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பினை வெளியிட்டார்.