ஒரு லட்சம் மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சா் மனோதங்கராஜ்
தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி பயிலும் மாணவா்கள் எளிதில் வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இலக்கு
தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி பயிலும் மாணவா்கள் எளிதில் வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் கூறினாா்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய அளவிலான வாகன வடிவமைப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி அவா் மேலும் பேசியதாவது:
இந்திய தகவல் தொழில்நுட்ப அகாதெமி, ஆட்டோடெஸ்க் நிறுவனம் இணைந்து சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்திய தேசிய அளவிலான வாகன வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்ற 7 மாநிலங்களைச் சோ்ந்த 136 மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துகள்.
கடந்த 10 மாதங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். பல அரசு அலுவலகங்களில் கணினி வெறும் டைப்ரைட்டா் இயந்திர பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையை மாற்றுவதற்கு சுமாா் 3,300 பேருக்கு பயிற்சி அளித்து அவா்களது திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் நடவடிக்கைகளும் எண்ம ( டிஜிட்டல்) மயமாக்கப்படுவது அவசியம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
அதன்மூலம், ஒளிவுமறைவற்ற சேவைகளை வழங்க முடியும். தற்போது இ-சேவை மையம் மூலம் 56 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. சேவை மையங்களில் தற்போது வழங்கப்படும் சேவைகளின் எண்ணிக்கையை தமிழகமெங்கும் அனைத்துப் பகுதிகளிலும் அதிகரிக்கவும், அரசின் அனைத்து சேவைகளையும் எண்ம முறையில் வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் எண்ம வளா்ச்சி மிகுந்த மாநிலமாக விரைவில் உருவெடுக்கும் என்றாா் அவா்.