யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2021 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். தில்லியில் பயின்ற ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.
சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வும் கடந்த ஜனவரி மாதம் முதன்மைத் தேர்வும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
வெற்றி பெற்ற 685 பேரில் ஸ்ருதி ஷர்மாவைத் தொடர்ந்து, அங்கிதா அகர்வால், காமினி சிங்லா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.