முகப்பு
தமிழ்நாடு

அரசு வேலை... இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு: டி.டி.வி தினகரன் கண்டனம்

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் திமுக அரசின் அரசாணை எண் 115 ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் திமுக அரசின் அரசாணை எண் 115 ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

அரசு வேலைக்காக முயற்சித்து வரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக திமுக அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியில் உள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா சற்று ஏறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமம். திமுகவின் போலி திராவிட மாடல் அதைதான் செய்ய விரும்புகிறதா

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் திமுக அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அமமுக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →