மணப்பாறை போட்டோ ஸ்டுடியோவில் திருட்டு: போலீசார் விசாரணை
மணப்பாறையில் போட்டோ ஸ்டுடியோ கடையில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமரா, ஸ்டுடியோ உபகரணங்களை திருடி சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மணப்பாறையில் போட்டோ ஸ்டுடியோ கடையில் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான கேமரா, ஸ்டுடியோ உபகரணங்களை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள இந்திரா திரையரங்கம் அருகில் ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் முத்துப்பாண்டி என்பவர் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடையினை அவரது மகன் சந்தோஷ் நிர்வகித்து வந்த நிலையில், நேற்று இரவு கடையினை பூட்டிவிட்டுச் சென்ற சந்தோஷ் இன்று காலை கடையினை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷெட்டர்கள் திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த சந்தோஷ், அங்கு வைத்திருந்த கேமரா, லென்ஸ்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஸ்டுடியோ உபகரணம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை போலீஸார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் லீலி ஆகியவை கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.