கோப்புப்படம் 
தமிழ்நாடு

'திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்தான்' - இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் மெகா ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் சென்றனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் சட்டம்- ஓழுங்கு சீர்கெட்டுள்ளதாக ஆளுநரிடம் தெரிவித்தேன்.  

கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பு நடந்திருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும். பல பேர் உயிரிழக்க நேரிட்டிருக்கும்.

தீவிரவாதம் என்றாலே உளவுத்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். உளவுத்துறை முன்கூட்டியே தெரிந்து இந்த குண்டுவெடிப்பைத் தடுத்திருக்கலாம். திமுக அரசு ஒரு திறமையற்ற அரசு. 

கள்ளக்குறிச்சி கனியாமூர் சம்பவத்தில் முன்கூட்டியே விசாரணை நடைபெற்றிருந்தால் வன்முறை, கலவரம் ஏற்பட்டிருக்காது. 

மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் சாதாரணமாக இங்கு நடக்கிறது. 

அனைத்துத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான். 

திமுக ஆட்சியில் தற்போது மருந்து தட்டுப்பாடு என்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது. காலாவதி மருந்தும் பயன்பாட்டில் உள்ளது. 

இன்று உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது. 

'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள ஒரு பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். பணி செய்வதற்கு முன்னரே, திமுக அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே திமுக ஊழலுக்கு உதாரணம்.

டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மது விற்பனை என டாஸ்மாக்கிலும் மெகா முறைகேடு நடந்து வருகிறது. 

தமிழக ஆளுநர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

SCROLL FOR NEXT