முகப்பு
தமிழ்நாடு

அரவக்குறிச்சி: கட்டடம் இடிந்து மூதாட்டி பலி!

அரவக்குறிச்சியில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து மூதாட்டி பலி. 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மூதாட்டி உடல் மீட்பு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:58 AM
கட்டிட இடிபாடுக்குள் சிக்கிய மூதாட்டியின் பொக்லைன் இயந்திரம் மூலம் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள்.
பகிர்:

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை காலை 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் இடிந்து மூதாட்டி பலியானார்.  5 மணி நேர போராட்டத்திற்கு பின் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடைவீதி பகுதியில் ரேஷன் கடை பின்புறம் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் மேல்தளம் மற்றும் கீழ்தளம் என இரண்டு பகுதியாக இருந்தது. கட்டடத்தின் கீழ் தளத்தில் ஹபீபுல்லாஹ் என்பவரின் மனைவி பாத்திமா பீவி (74) என்பவர் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மூதாட்டி குப்பை கொட்டுவதற்காக வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

காலை சுமார் 7.30 மணி அளவில் திடீரென வீட்டில் இருந்த பாத்திரங்கள் கீழே விழ தொடங்கியுள்ளது. சுதாரித்து வெளியே வருவதற்குள் வீடு இடிந்து தரைமட்டமாகியதில் மூதாட்டி உள்ளே சிக்கினார். தகவல் அறிந்து அங்கு வந்த அரவக்குறிச்சி காவல் துறையினர் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மூதாட்டியை மீட்க நீண்ட நேரம் போராடினர்.

மேலும், தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் மீட்புப் பணிகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பி.செல்வராஜிடம் கேட்டிருந்து மீட்பு பணிகளைப் பார்வையிட்டார். இந்நிலையில் தீயணைப்புத் துறையினரின் தீவிர போராட்டத்திற்கு பிறகு பகல் 12.30 மணி அளவில் மூதாட்டியின் உடல்சடலமாக மீட்கப்பட்டது. 

பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடம் இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →