வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில் பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பட்டியலிடப்பட்டது, அவை,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கும் செயற்பொறியாளர்சிறப்பு அலுவல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். இவரின் தலைமையின் கீழ், அந்த மின் பகிர்மான வட்டத்தில் இரண்டு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்னமே கேட்டறிந்து அவைகளின் தயார்நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.
பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மின் தடங்கல் ஏற்பட்டால் முதல்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மீதமுள்ள பில்லர் பாக்ஸ்களும் தரை மட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் உயரத்தில் நிறுவும் பணிகள் அனைத்தும் இந்த மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.
தூண் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை அந்தப் பகுதியை சார்ந்த செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
காற்றுடன் கூடிய மழையின் போது மிகத் தாழ்வான நிலையில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் அணைத்து வைக்கக்கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.