முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 அக்டோபர், 2022 at 11:30 AM
சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீசிவகாமி அம்மன் கோயில் தேரோட்டம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:07 PM


சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்கு கரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக்.12 ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. 

Advertisement

இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் அக்.12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வியாழக்கிழமை (அக்.20) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் காலை 8 மணிக்கு தேரில் எழுந்தருளி மகாதீபாரதனைக்கு பின்னர் கீழவீதி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

அக்.21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் சிவகாமசுந்தரி அம்மனின் பட்டு வாங்கும் உற்சவம் நடராஜர் சந்நிதியில் நடைபெறுகிறது. 

பின்னர் இரவு அம்மன் சந்திதியில் பூரச்சலங்கை உற்சவமும், அக்.22 ஆம் தேதி சனிக்கிழமை காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உத்சவமும் நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.