தீபாவளிப் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் கோயம்பேடு பிரதான சாலை, அண்ணாசாலை, பெரியார் சாலை உள்ளிட்டவை வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடின.
தீபாவளிப் பண்டிகை திங்கள்கிழமை நாளை (அக்.24) கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டிய விடுமுறை தினத்தால், சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்த பலர் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய வார இறுதி விடுமுறையால் ( சனி, ஞாயிறுக் கிழமை) முன்கூட்டியே பலர் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
பேருந்துகள், ரயில்கள் மூலமாக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், சென்னையின் முக்கிய சாலைகள் வாகன நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தியாகராய நகர், புரசைவாக்கம் போன்ற முக்கிய கடைவீதிகளில் மட்டும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. எனினும், சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.