கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இடையூறு செய்யும் கேரள அரசை கண்டித்து 3 எல்லைகளில் நவ.1 ல் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுபற்றி சங்க தலைவர் இ.சலேத்து, பொதுச்செயலாளர் பொன்.காட்சிகண்ணன், ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் ஆகியோர் பிரதமர், தமிழக கேரள முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழக எல்லை பகுதிகளை ஆக்கிரமித்த கேரள அரசு முறையாக எல்லையை அளவீடு செய்யாமல், டிஜிட்டல் ரீ சர்வே நடத்துவதை கைவிடவேண்டும்,
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக விஷம பிரசாரம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களையும், ஆவணப்படங்களை வெளியிடுபவர்களையும் கைது செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதித்து முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 152 அடியில் தண்ணீர் தேக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய எல்லைப்பகுதியில் முற்றுகையிட்டு, கேரளா செல்லும் வாகனங்களை மறித்து போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சங்கத் தலைவர் இ.சலேத்து கூறியது, செங்கோட்டை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய 3 தாலுகாக்கள் கேரளாவில் இணைந்திருந்தது. தமிழகத்தோடு கடந்த 1956 நவ.1 ல் இணைக்கப்பட்டது. அந்த நாளில் எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.