அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதையும் பார்க்க : ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை - புகைப்படங்கள்
திருவாரூர் மாவட்டம் நாச்சியார்கோயிலைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சாமிநாதன்(37). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது தங்கை திருமணம் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்த அணைக்குடம் கிராமத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சாமிநாதன், திருமணம் முடிந்த பின் அன்று பிற்பகல் அருகேயுள்ள ஒரு உணவகத்துக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சாமிநாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.பலத்த காயமடைந்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமையிலான காவல் துறையினர், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தா.பழூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணையில் மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக சாமிநாதன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.