18ஆம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் ஆட்சியர் முரளிதரன்
தேனி மாவட்டத்தில் உள்ள 18ஆம் கால்வாய் பாசன நிலங்களுக்கு, புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் தண்ணீரை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 18ஆம் கால்வாய் பாசன நிலங்களுக்கு, புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் தண்ணீரை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் 18ஆம் கால்வாய் பாசன பரப்பில் தேனி மற்றும் உத்தமபாளையம் தாலுகாக்களில் 4 ஆயிரத்து 614.35 ஏக்கர் பரப்பளவில் பாசன நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்து பேசியது,
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 18 ஆம் கால்வாய் கீழுள்ள பாசன நிலங்களுக்கு புதன்கிழமை முதல் விநாடிக்கு 98 கன அடி வீதம் 30 நாளுக்கு மொத்தம், 255 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டத்தில், 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறும், விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
உடன் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் பால்பாண்டியன், கூடலூர் நகர்மன்றத் தலைவர் பத்மாவதி லோகந்துரை, 18 ஆம் கால்வாய் விவசாய சங்கத் தலைவர் ராமராஜ் மற்றும் விவசாயிகள், பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.