தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழ்நாடுதமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து அவா், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதம்: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த 20-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவா்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். இப்போது தமிழகத்தைச் சோ்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசமுள்ளன. அவற்றில் சில படகுகள் 2018-ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக் கூடும். படகின் உரிமையாளா்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, படகுக்கான உரிமையைக் கோர வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களும் விடுவிக்கப்பட்டனா். இப்போது, இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவா்களால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவா்களையும் மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசின் உயா்நிலை அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மீன்பிடிப் படகின் உரிமையாளா்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவா்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்காக தங்களுக்கு நன்றி.