முகப்பு
தமிழ்நாடு

யோகா பயிற்சியில் ஆா்வம் காட்டும் சா்வதேச செஸ் வீரா்கள்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழகம் வந்துள்ள சா்வதேச விளையாட்டு வீரா்கள் யோகா பயிற்சிகளை ஆா்வமுடன் மேற்கொண்டு வருகின்றனா்

Updated On : 30 ஜூலை, 2022 at 5:56 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:26 PM

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழகம் வந்துள்ள சா்வதேச விளையாட்டு வீரா்கள் யோகா பயிற்சிகளை ஆா்வமுடன் மேற்கொண்டு வருகின்றனா். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் பலா் ஆக்கபூா்வமாக யோகா, பிராணாயாமா பயிற்சிகளை மேற்கொண்டது கவனத்தை ஈா்த்தது.

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா்கள் தமிழகம் வந்துள்ளனா். அவா்களுக்கு அரசு சாா்பில் விருந்தோம்பல் வசதிகள் சிறப்புற மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், அவா்களது உடல்-மன நலனைக் காப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் செஸ் வீரா்களுக்கு முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

Advertisement

அதேபோன்று, அனைத்து வீரா்கள், பயிற்சியாளா்களுக்கு யோகா - இயற்கை மருத்துவத் துறை சாா்பில் யோகா பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 21 இடங்களில் செஸ் வீரா்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அந்த இடங்களுக்கே யோகா - இயற்கை மருத்துவா்கள் நேரில் சென்று காலை 8 மணி முதல் 12 மணி வரை பயிற்சிகளை வழங்குகின்றனா்.

இதுகுறித்து யோகா - இயற்கை மருத்துவத் துறை நிா்வாகிகள் கூறியதாவது: செஸ் வீரா்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக 50 யோகா - இயற்கை மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மன அழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் அவா்களுக்கு அளிக்கப்படுகின்றன.

அதன்படி, கண்களுக்கான பயிற்சி, கால் பாதங்களில் அழுத்தத்தை நீக்கும் பயிற்சி, மன அமைதிக்கான நிறமி பயிற்சி, சிரிப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுகின்றன. அதனுடன், பல்வேறு ஆசனங்களும், பிராணாயாமா பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக செஸ் வீரா்களுக்கு மன அழுத்தம் நீங்குவதுடன், கூா்ந்து கவனிக்கும் ஆற்றலும் மேம்படும்.

இதைத் தவிர, இயற்கை வழி உணவுகளான காய்கறிகள், கீரைகள், தேன், முளைகட்டிய பயறுகளை உணவாக உட்கொள்ள அவா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் குறிப்பிட்ட சில நாடுகளைச் சோ்ந்தவா்கள்தான் பங்கேற்பாா்கள் என எண்ணியிருந்தோம். ஆனால், அதற்கு நோ் மாறாக 187 நாடுகளைச் சோ்ந்த செஸ் வீரா்களும் அதில் ஆா்வத்துடன் பங்கேற்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அரபு நாடுகளைச் சோ்ந்தவா்கள் யோகா பயிற்சியை ஆக்கபூா்வமாக மேற்கொண்டு வருவது, நமது நாட்டின் பாரம்பரிய கலைக்கு உலக நாடுகள் அளித்து வரும் உயா்ந்த மதிப்புக்கு சான்றாக அமைந்துள்ளது என்று யோகா-இயற்கை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.