முகப்பு
தமிழ்நாடு

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துகள்: ராமதாஸ்

அறத்தையும், கொடையையும்  வலியுறுத்தும் திருநாளான இரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும்  இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

அறத்தையும், கொடையையும்  வலியுறுத்தும் திருநாளான இரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும்  இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு  எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாவிடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார். அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை செய்வது அது போன்ற பத்து மடங்கு நன்மைகளை பெற்றுத் தரும் என்று இறைதூதர் கூறியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இரலான் திருநாள் என்பது ஒரு புனிதமான அனுபவம் ஆகும். இஸ்லாம் எத்தகைய நன்னெறிகளை கற்பிக்கிறதோ, அவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் காலம் தான் இரமலான் திருநாள் ஆகும். நோன்புக் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுதல்,  காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், யாரிடமும் மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீய வார்த்தைகளை பேசாமல் இருத்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தில்  இஸ்லாமியர்கள்  தவறாமல் கடைபிடிக்கின்றனர். அந்த வகையில் இஸ்லாமியர்களை உன்னதமாக்கும் திருநாளே இரமலான்.

இந்த உன்னத குணங்களை இஸ்லாமியர்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உலகில் உள்ள அனைவரும் இந்த குணங்களை கடைபிடித்து உன்னதமானவர்களாக மாறலாம். அத்தகையதொரு நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும் ஆசையும் ஆகும்.

அந்த ஆசை நிறைவேற வேண்டும்; உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க  இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →