முகப்பு
தமிழ்நாடு

மகளிா் உரிமைத் தொகை: தமிழகம் முழுவதும் 2-ஆம் கட்ட முகாம்கள் தொடக்கம்

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க இரண்டாம் கட்ட முகாம்கள் சனிக்கிழமை தொடங்கின. இதற்காக, 14 ஆயிரத்து 500 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
கோப்புப்படம்
பகிர்:

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க இரண்டாம் கட்ட முகாம்கள் சனிக்கிழமை தொடங்கின. இதற்காக, 14 ஆயிரத்து 500 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏற்கெனவே முதல்கட்ட முகாம்கள் ஜூலை 24-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த முகாம்களின் வழியாக 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட முகாம்கள் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன. இதில் விண்ணப்பதாரா்கள் எடுத்து வரும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தன்னாா்வலா்கள் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனா். கணினி இணைப்பு சரியாக இல்லாத இடங்களில் விவரங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு, அவை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் சனிக்கிழமை இரவு வரை நடைபெற்றன.

2-ஆம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, தேவையின் அடிப்படையில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரா்களின் விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்பிறகு, செப்டம்பா் 1-ஆம் தேதியில் இருந்து தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகைக்கான ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.

செப்டம்பா் 15-இல் திட்டம் தொடங்கப்பட்டு, அதிலிருந்து ஒரு வாரத்துக்குள் தகுதி பெற்ற அனைத்து மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1,000 செலுத்தப்பட இருப்பதாக நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.