நேற்றைப் போலவே இன்றும் மழையை எதிர்பார்க்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன்
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்துள்ளது. இன்றும் அதுபோல மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்துள்ளது. இன்றும் அதுபோல பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருப்பதாவது, நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று காலை வரை பெய்துள்ளது, இதுவரை பெய்த மழை வரலாறுகளில் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்துவிட்டது. இன்று காலை மழை மேகங்கள் அனைத்தும் கடற்கரையை ஒட்டி நகர்ந்துவிட்டன. அதனால் பகல் நேரத்தில் மழை இருக்காது.
நேற்று இப்படி ஒரு மழை பெய்யும் என்று கணிக்க வாய்ப்பே இல்லை. இது கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மாலை பெய்த 200 மி.மீட்டர் மழையைப் போன்ற ஒரு அதிசய நிகழ்வுதான். அதாவது, 1-5 மி.மீ. மழை பெய்யலாம் என்றுதான் கணிக்க முடியும். ஆனால், நேற்று 100 மி.மீட்டருக்கும் மேல் மழை பெய்துவிட்டது.
நான் எப்போதெல்லாம் சென்னையை விட்டு வெளியே இருக்கிறேனோ.. அப்போதெல்லாம் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இது முன்பும் நடந்திருக்கிறது. நேற்றும் நடந்துள்ளது.
அண்ணாநகர் மேற்கு, அம்பத்தூர், கொரட்டூர், பெரம்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் அவ்வளவாக மழை பெய்யவில்லை. தெற்கு சென்னையை மழை மீண்டும் மீண்டும் துவம்சம் செய்துவிடுகிறது.
அதுபோல இன்று பள்ளிகளுக்கு விடுமுறை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான்.. காரணம், மழை காலையில் விட்டுவிட்டதும், சாலைகளில் மழை நீர் தேங்காமல் ஓடோடிவிட்டதும் ஏமாற்றத்துக்குக் காரணம்.
இன்று மாலை அல்லது இரவில், நேற்றைப் போல பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.