சென்னையில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை திணிப்பது ஏன்?
சென்னையை சீரழிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாகவும, அவசியமான பல பணிகளை விட்டுவிட்டு, கேடான அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை திணிப்பது ஏன்? என்று பசுமைத் தாயகம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
சென்னையை சீரழிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாகவும, அவசியமான பல பணிகளை விட்டுவிட்டு, கேடான அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை திணிப்பது ஏன்? என்று பசுமை தாயகம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இது குறித்து பசுமை தாயகம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மாநகரம் முழுவது பலகோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் கட்டப்படும் என்று மேயர் பிரியா நேற்று அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் தலைமையிலான ‘சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA)’ சென்னை பெருநகருக்கான வாகன நிறுத்தக் கொள்கையை உருவாக்கிக்கொண்டு இருக்கும்போதே, அதற்கு எதிரான அடுக்குமாடி வாகன நிறுத்த திட்டத்தை மேயர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. வட்டாட்சியர் வாகனத்திலேயே ஜிபிஎஸ் பொருத்திய குற்றவாளிகள்! ஏன்?
அடுக்குமாடி வாகன நிறுத்தம் (Multi-level Car Parking - MLCP) ஒருபோதும் போக்குவரத்தை மேம்படுத்தாது. சீரழிக்கும் என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை. எங்கெல்லாம் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் கட்டப்படுகின்றனவோ, அங்கெல்லாம் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும்.
மேலும், நடைபாதை, மிதிவண்டிப்பாதை, பேருந்து போக்குவரத்து போன்றவற்றுக்கு தேவைப்படும் நிதியும் இடமும் வீணடிக்கப்படும். அதனால், மேலை நாடுகளில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் ஒழிக்கப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரில் இவற்றை வேண்டுமென்றே திணிக்கிறார்கள்.
சென்னையில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமையும் இடங்கள்
1. திருவொற்றியூர் நகராட்சி வணிக வளாக கட்டடம்
2. திருவொற்றியூர் நகராட்சி மருந்தக கட்டட வளாகம்
3. புல்லா அவென்யூ பழைய வளாகம்
4. ஈ.வெ.ரா., சாலையில் ஈகா திரையரங்கம் எதிரில் உள்ள வளாகம்
5. ராஜா அண்ணாமலைபுரம் வளாகம்
6. சி.பி. ராமசாமி சாலையில் உள்ள வளாகம்
7. டாக்டர் நாயர் சாலை பழைய வளாகம்
8. என்.எஸ்.கே. சாலை கோடம்பாக்கம் மண்டல அலுவலகம்
9. ஆற்காடு சாலை வளசரவாக்கம் மண்டல அலுவலகம்
10. அடையாறு மண்டலம் இந்திரா நகர், 3வது அவென்யூ சாலையில் உள்ள வணிக வளாகம்.
இதையும் படிக்க.. விடைபெறுகிறதா ரெனால்ட்ஸ் பந்துமுனைப் பேனா? 90களின் அடையாளம்..
தி.நகரில் வீணடிக்கப்பட்ட 40 கோடி ரூபாய்
தி.நகர் தணிகாச்சலம் சாலையில் 40 கோடி ரூபாயில் முதல் அடுக்குமாடி கார் நிறுத்தத்தைக் கட்டினார்கள். இப்போது முக்கியமான தி.நகர் வர்த்தகப்பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து வெறும் கட்டிடம் தான் நிற்கிறது! அங்கு கார் நிறுத்த எவரும் இல்லை! அடுக்குமாடி வாகன நிறுத்துத்தின் பணியாளர்கள் வெட்டியாக சம்பளம் வாங்கிக்கொண்டு, ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும், 'செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டும் செயல்' எனும் பழமொழி போன்று, அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை காப்பாற்றுவதற்காக பாண்டி பஜாரில் மட்டும் சாலையோரத்தில் வாகனம் நிறுத்தும் கட்டணத்தை 200% உயர்த்தியது சென்னை மாநகராட்சி!
சாலையில் வாகனம் நிறுத்தினால் மணிக்கு 60 ரூபாய் கட்டணம், அதுவே, அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் வெறும் 20 ரூபாய் தான். ஆனாலும்கூட எவரும் அதனை பயன்படுத்தவில்லை.
முதன்மையான 3 கேள்விகள்
1. வாகன நிறுத்தம் கொள்கை உருவாகும் முன்பே எம்எல்சிபி கட்டுவது ஏன்?!
2. சியுஎம்டிஏ வழிகாட்டுதலை மீறுவது ஏன்?
3. சென்னை என்எம்டி கொள்கை என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கு மிகவும் முதனமையான தேவை தரமான பேருந்துகள்தான். ஆனால், இங்கு ஓடும் பேருந்துகள் பெரும்பாலானவை காலம் கடந்து ஓடுகின்றன. சுமார் 10,000 பேருந்துகள் தேவைப்படும் சென்னை பெருநகரில் வெறும் 3000 பேருந்துகளே இயங்குகின்றன. பேருந்துகளை அதிகமாக்கவும், நவீனமாக்கவும் கோரினால் – பணம் இல்லை என்று கைவிரிக்கிறார்கள்.
அடுக்குமாடி வாகன நிறுத்தம் எனும் பிழையான, மோசமான திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். சென்னையின் எந்த இடத்திலும் அவற்றை அமைக்கக் கூடாது. மாபெரும் கட்டுமான நிறுவனங்களின் இலாபமும், ஊழலும்தான் முக்கியமானது என்கிற நிலையை ஒழித்து, சென்னை மாநகர மக்களின் நலனுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.