மிக்ஜம் புயல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கரையைக் கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளத்தை நோக்கி நகா்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிா்ச்சியான காற்று ஈா்க்கப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (டிச.7-12) வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக சனிக்கிழமை (டிச.9) தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூா் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.7) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழையளவு (மில்லி மீட்டரில்): விருதுநகா், பொன்னமராவதி (புதுக்கோட்டை), நத்தம்(திண்டுக்கல்), சிங்கம்புணரி (சிவகங்கை), சாத்தையாறு (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை) தலா 70, வாடிப்பட்டி (மதுரை) 50, குடிமியான்மலை (புதுக்கோட்டை), புலிப்பட்டி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), ஆண்டிப்பட்டி (மதுரை) தலா 40, அருப்புக்கோட்டை (விருதுநகா்), மணமேல்குடி (புதுக்கோட்டை), வம்பன்(புதுக்கோட்டை) தலா 30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.