திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வியாழக்கிழமை பார்வையிட்ட ஓ. பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என தமிழக அரசு கூறுவது தவறானது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மத்திய அரசை எதிர்பார்க்காமல் நிவாரணங்களை அறிவித்தார். அதேபோன்று திமுக அரசும் உடனடியாக நிவாரணங்களை அறிவிக்க வேண்டும். தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதற்கான தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு மாதம் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை மக்கள் இழந்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 25000 நிவாரணம் வழங்க வேண்டும். வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றார்.