கோவை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் தர்பூசணி பழத்திலும், உணவிலும் அவரது உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை காலை உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அவரது உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பிரதமர், பிற மாநில முதல்வர்கள் பலரும் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார்: கண்கலங்கிய ரஜினிகாந்த்
இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் தர்பூசணி பழத்திலும், உணவிலும் விஜயகாந்த் உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர் காய்கறி அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தர்பூசணி பழத்தில் விஜயகாந்த் உருவத்தை செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யுஎம்டி ராஜா என்ற நகை வடிவமைப்பு கலைஞர் "பசியாறும் சோறில் விஜயகாந்த்" என்ற தலைப்பில் சாப்பாட்டில் மஞ்சள் பொடியை கொண்டு விஜயகாந்த் உருவத்தை வரைந்துள்ளார்.
விஜயகாந்த் இல்லத்திற்கு யார் சென்றாலும் அனைவருக்கும் அவர் உணவளிப்பவர் என்பதால் உணவில் மஞ்சள் பொடியை கொண்டு அவரது உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.