சென்னை: திருமணமானது முதல் குழந்தை வேண்டும் என்று கூறிய கணவரையும் கணவர் வீட்டாரையும் ஏமாற்ற கருவுற்றிருப்பதாக பெண் நாடகமாடி, குழந்தையும் பிறந்துவிட்டதாகக் கூறிய நிலையில், கணவரின் போராட்டத்தால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண், கருவுற்றிருப்பதாக கணவரையும், கணவர் வீட்டாரையும் நம்ப வைத்துள்ளார். முறைப்படி சீமந்தம் நடைபெற்று தாய் வீட்டுக்கும் வந்துள்ளார். இதில் யாருக்குமே எந்த சந்தேகமும் வராததுதான் ஆச்சரியம்.
பிறகு, ஒரு நாள் பிரசவ வலி வந்து தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக, கணவரிடம் அப்பெண் கூறியிருக்கிறார்.
ஆன்லைனிலிருந்து ஒரு பெண் குழந்தையின் புகைப்படத்தை எடுத்து கணவருக்கும் அனுப்பிவிட்டார். பிறகுதான் பிரச்னையே.. குழந்தையைக் காண கணவர் மருத்துவமனைக்கு வர, மருத்துவமனையில் மனைவி மட்டும் இருந்ததைப் பார்த்து குழந்தையை கேட்டுள்ளார்.
இதையும் படிக்க.. குடுகுடுப்பைக்காரரை வைத்து காங்கிரஸ் பிரசாரம்: அண்ணாமலை விமர்சனம்
குழந்தை இன்குபேட்டரில் இருப்பதாகக் கூற, கணவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கேட்டு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த நேரத்தில்தான், மருத்துவமனை நிர்வாகம், அப்படி ஒரு குழந்தை பிறக்கவேயில்லை என்பதை கணவரிடம் தெரிவித்துள்ளது.
உடனடியாக மருத்துவமனை நிர்வாகமே காவல்நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் வந்து, அப்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் அவர் கருவுறவேயில்லை என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.