நெல்லை அருகே நடுரோட்டில் தீப்பிடித்த வேன்! 15 பேர் உயிர்தப்பினர்
கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே நடுரோட்டில் வைத்து வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே நடுரோட்டில் வைத்து வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேனில் பயணித்த 15 பேர் உயிர் தப்பினர்.
தென்காசி வாசுதேவநல்லூரைச் சேர்ந்த மக்கள் சிலர் தங்கள் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக மினி வேனில் நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்றுள்ளனர்.
வண்டியில் ஓட்டுநர் உள்பட ஆண்கள் 12 பேர், பெண்கள் 2 பேர் என மொத்தம் 15 பேர் பயணித்துள்ளனர். வேன் நெல்லை டக்கரம்மாள் புரம் அருகே சென்றபோது திடீரென பேருந்தில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது.
இதையும் படிக்க | முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!
உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் கணேசன் வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறக்கி விட்டுள்ளார். அடுத்த சில நொடிகளில் பேருந்து குபுகுபுவென தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாவட்ட அலுவலர் கணேசன், மாவட்ட உதவி அலுவலர் வெட்டும் பெருமாள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் விபத்தில் வேன் முழுவதும் தீயில் கருகி நாசமாகியது. அதிர்ஷ்டவசமாக வேனில் பயணித்த 15 பேரும் உயிர் பிழைத்தனர். கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்கச் சென்றபோது வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.