மணப்பாறையில் புத்தாண்டையொட்டி மிக பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவலாயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. சாலைகளில் போக்குவரத்து இடையூறு செய்த இளைஞர்களை காவல்துறையினர் லேசான தடியடி செய்து விரட்டியடித்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் மிக பழமை வாய்ந்த கிறித்துவ பேராலயம் புனித லூர்து அன்னை ஆலயம். புத்தாண்டு தினத்தையொட்டி இரவு வண்ண மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டு பிறக்கும் வேத பாடல் ஆலயத்தில் முழங்க 2023-ஆம் ஆண்டு பிறப்பதை உணர்த்தும் வகையில் காணொளி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மணப்பாறை மறைவட்ட அதிபர் தாமஸ் ஞானதுரை தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வானவேடிக்கைகள் நிகழ 2023 புத்தாண்டு பிறப்பு கொண்டாடப்பட்டது.
இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிறிஸ்துவ பொதுமக்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர். அனைவரும் தங்களது புத்தாண்டு தின மகிழ்ச்சியை உடன் இருந்தவர்களிடம் பரிமாறிக்கொண்டனர். இதேபோல் பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, தீராம்பட்டி, மலையடிப்பட்டி, கருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள தேவலாயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் முகச்சுழிப்பை ஏற்படுத்தும் வண்ணம் ஒலியினை எழுப்பி பைக் ரேஸ் சென்றனர்.
சாலையில் சென்ற வாகனங்களை மறித்த இளைஞர்கள், புத்தாண்டு வாழ்த்து சொல்லும் பெயரில் சாலை முழுவதும் மறித்துக்கொண்டு வாகன ஓட்டிகளை சிரமத்திக்குள்ளாக்கினர். நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் லேசான தடியடி செய்து இளைஞர்களை பிரதான சாலைகளிலிருந்து விரட்டியடுத்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.