மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம்!
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து தமிழக ஆளுநர் தனது உரையில் பேசிய நிலையில், மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இத்திட்டம் குறித்து ஆளுநர் பேசியதாவது, “சென்னை பெருநகரின் வேகமான வளர்ச்சி நீடித்து நிலைக்கத்தக்கதாக இருக்க வேண்டுமெனில், இந்தப் பெருநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிட்ட வளர்ச்சி அவசியம் என்பதை இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. இந்த வகையில், சென்னைக்கு அருகே உள்ள மாடம்பாக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சிப் பகுதியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி சென்னை பெருநகர வளர்ச்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க | காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது: ஆளுநர் உரை
நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்களைப் பெற்றுத் திரட்டி, திட்டமிட்ட வளர்ச்சிக்கு ஏதுவாக பல்வேறு நிலப் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவற்றை நில வகைப்பாடு செய்து, நில உரிமையாளர்களுக்கு பங்கீடு செய்து வழங்கி, புறநகர் வளர்ச்சிக்கு வித்திடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நில உரிமையாளர்கள் மனமுவந்து ஒப்புதல் அளித்துள்ள இப்பணிகள் விரைவில் நிறைவுறும்.
இதன் அடுத்தகட்டமாக, இதே நிலத்திரட்டு முறையைப் பின்பற்றி, கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி, மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம் ஒன்று அமைக்கப்படும். இச்சாலையும் நான்குவழிச் சாலையாகத் தரம் உயர்த்தப்படுவதால், சென்னை பெருநகரப் பகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அச்சாணியாக இத்திட்டம் விளங்கும்” எனத் தெரிவித்தார்.