சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கல் விழாவை கிராமப்புற மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கலன்று, கிராமத்தின் மையத்திலுள்ள கோயில் மைதானத்தில் கூடும் மக்கள், பாரம்பரிய கலைகளான தாரை, தப்பட்டை, உறுமி மேளம் வாசித்தும், ஆண்கள், பெண்கள் குழந்தைகளென அனைவரும் ஆடிப்பாடியும், மாலை நேரத்தில் காளைகளை கயிற்றில் பூட்டி, உரி என குறிப்பிடப்படும் பூத தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட கட்டை வண்டியைக் காண்பித்து, காளைகளை உற்சாகப்படுத்தும் எருதாட்டம் நடத்தியும் காணும் பொங்கல் விழாவைக் கொண்டாடி பொழுதுபோக்கி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வாழப்பாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை கிராமங்கள்தோறு காணும் பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி, வில்வனூர், செக்கடிப்பட்டி, பொன்னாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் எருதுகள், ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்த விவசாயிகள், மேள வாத்தியங்கள் முழங்க ஆரவாரத்தோடு கோயில் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இளைஞர்கள் காளைகளை கயிற்றில் கட்டி, உரி வண்டியை காண்பித்து எருதாட்டம் நடத்தி, குழந்தைகள், பெண்கள் உள்பட கூடியிருந்த மக்களை மகிழ்வித்தனர்.