தமிழகம் - தமிழ்நாடு: ஆளுநர் விளக்கம்
வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின்போது, தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்லாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக திமுக சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் இரண்டு முறை தில்லி சென்று திரும்பியிருந்தார்.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி - தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
இதையும் படிக்க.. 17 கிலோ தங்கம், 1.57 கோடி ரொக்கம்.. : அதிர்ச்சியில் சிபிஐ அதிகாரிகள்
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது. மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரையே மாற்ற பரிந்துரைத்தது போல வாதங்கள், விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.