தமிழ்நாடு

காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி: அமலாக்கத் துறை வழக்கில் இன்று உத்தரவு

அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மற்றும் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை முதன்மை அமா்வு

DIN

அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மற்றும் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இதேபோல், செந்தில் பாலாஜி தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொலி மூலமாக ஆஜா் படுத்தப்பட்டாா். அப்போது, அவரிடம் ‘அமலாக்கத் துறையினா் தாக்கல் செய்த மனு கிடைத்ததா?’ என நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு செந்தில் பாலாஜி ‘இல்லை’ என தெரிவித்ததை அடுத்து, மனுவை கையொப்பமிட்டு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து நடந்த வாதத்தில், வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும், போக்குவரத்துக் கழக நியமனங்களுக்கு பெற்ற தொகை குறித்த முழு விவரங்களைப் பெற வேண்டி உள்ளது என்றும் அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் கூறினாா். மேலும், அமலாக்க துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

இந்த வாதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, கடந்த 13-ஆம் தேதி காலை 7 மணி முதல் 14-ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளதால், அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என வாதிட்டாா்.

மேலும், இதய அறுவை சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயா் நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் முதன்மை அமா்வு நீதிபதி அல்லியிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத் துறையின் துணை இயக்குநா் காா்த்திக் தாசரி, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தனது வாக்குமூலத்தை அளித்தாா்.

இறுதியாக அமலாக்கத் துறையினா் 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு குறித்து செந்தில் பாலாஜியின் விருப்பம் தொடா்பாக நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினாா். அதற்கு அவா் ‘விருப்பமில்லை’ என்றாா். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த இரண்டு மனுக்கள் மீதும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT