தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்திவந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது கடந்த 73 ஆண்டுகளில் பெய்த 3வது கனமழை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயல்பு அளவு 4 செ.மீட்டரை விட 163 சதவீதம் அதிகமாக 10.3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ, சென்னை அண்ணா பல்கலையில் 10 செ.மீ அளவும் மழைப் பதிவாகியுள்ளது.
சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் 2 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.